

புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 15-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காவிரி தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திருராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கோபி ஆகியோர் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது, கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. காவிரியின் நீரியல் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் மழை அளவு மற்றும் நீர் வெளியேற்ற அளவு போன்றவை வழக்கமான அளவில் இருப்பதாக தெரியவந்தது. இந்த நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். குழுவின் அடுத்த கூட்டம் இதே மாதத்தில் 3 அல்லது 4-வது வாரத்தில் நடைபெறும் என்று கூறினார்.