

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஞாயிற்று கிழமை அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய கூடாது என்றும் கட்டாய வாக்குமூலம் பெற கூடாது என்றும் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க தலைமை செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 9ந்தேதி சிட்பண்டு மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.