புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.14,300 கோடி மத்திய அரசு ஒப்புதல்

புதுவை அரசிடம் பட்ஜெட் தொடர்பாக சில விளக்கங்களை மத்திய நிதி அமைச்சகம் கேட்டிருந்தது.
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.14,300 கோடி மத்திய அரசு ஒப்புதல்
Published on

புதுச்சேரி,

புதுவை அரசின் ரூ.14,300 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி நடந்தது. தேர்தல் காரணமாக நிதி ஆண்டான 2026-27-க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 15-வது சட்டசபையில் நிதி பொறுப்பு வகித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி 5 மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு) ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக் கல் செய்தார்.

ரூ.14,300 கோடி பட்ஜெட்

இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் (ஆகஸ்டுடன்) முடிவடைகிறது. அதற்கு முன்பாக முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக புதுவை தலைமை செயலகத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி நடந்தது.

இதில் புதுச்சேரி அரசு ரூ.14 ஆயிரத்து 300 கோடிக்கு பட்ஜெட்டை இறுதி செய்தது. பட்ஜெட்டிற்கு அனுமதிக்கேட்டு மத்திய உள்துறைக்கு கடந்த மாதம் புதுவை அரசு கோப்பினை அனுப்பி வைத்தது. மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய நிதி அமைச்சகம் கேள்வி

புதுவை அரசிடம் பட்ஜெட் தொடர்பாக சில விளக்கங்களை மத்திய நிதி அமைச்சகம் கேட்டிருந்தது. குறிப்பாக புதுச்சேரியின் கடன் நிலைமை பற்றிய சந்தேகங்களை கேட்டது. அதற்கு புதுச்சேரி அரசும் உரிய பதில் அனுப்பியது.

கடந்த மார்ச 31-ந் தேதி நிலவரப்படி புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.11,876.38 கோடியாக உள்ளது. இதில் பெரும்பகுதி அதாவது 84.89 சதவீதமாக (ரூ.10,083.86 கோடி) ரிசர்வ் வங்கியின் மூலம் பெறப்பட்ட சந்தை கடன், இதர கடன்கள் பொதுக் கணக்கு, நபார்டு, சிறு சேமிப்பு பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ளன. கடன் மேலாண்மை கட்டுக்குள் தான் உள்ளது.

புதுவை அரசு பதில்

கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகளில் மொத்த அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பு ரூ.9,449.49 கோடியாக இருந்த நிலையில் புதுச்சேரி அரசு ரூ.7,522.92 கோடியை மட்டுமே கடனாகப் பெற்றுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.19 சதவீதமாக உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட 25 சதவீதமாக வரையிலான கடன் வரம்பிற்குள் இருப்பதால், நிதிநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது.

மாநில அரசு தனது கடன் சுமையைக் கட்டுக்குள் வைக்க, ஒட்டுமொத்த கடன் வாங்குவதைக் குறைத்தல் மற்றும் வட்டி விகிதங்களை முறைப்படுத்துதல் போன்ற கடன் மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வருகிறது என மத்திய நிதி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்புதல்

புதுவை அரசின் விளக்கத்தை தொடர்ந்து புதுச்சேரி பட்ஜெட்டுக்கான ஒப் புதல் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து கிடைத்தது. விரைவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் நாள் அறிவிக்கப்படும்.

2026-2027-க்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டமன்றம் இந்த மாதம் இறுதியில் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பாக சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com