தேர்வு சீர்திருத்தங்களுக்காக 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.
நந்தன் நிலேக்கனி
Published on

புதுடெல்லி,

தொழில்நுட்ப நிபுணரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேக்கனி தலைமையில் தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்து அதில் பேசியுள்ளதாவது:-

விரைவு நீதிமன்றங்கள்

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஏற்கனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். மேலும், கடுமையான சட்ட விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், நாம் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்; அத்துடன் தொழில்நுட்பத்தை அதில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

"இக்குறைபாடுகளைக் களைவதற்கும், தேர்வுச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனிவரும் தேர்வுகளின் நம்பகத்தன்மையும் நேர்மையும் உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும். வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும். வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும். தேர்வுகளின் போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்மட்ட குழு

இந்த நிலையில், தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம் பெற்றுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com