

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இதில் அதிகமான பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ள நிலையில், 2-வது டோஸ் பெற்றிருப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே 2-வது டோஸ் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இதுவரை 71.24 கோடி முதல் டோஸ் போடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 76 சதவீத பயனாளிகள் பலன் பெற்றுள்ளனர். அதே நேரம் 30.06 கோடி பேர் அதாவது 32 சதவீதம் பேர் 2-வது டோஸ் போட்டுள்ளனர். எனவே முதல் டோஸ் போட்டு இடைவெளி காலம் முடிந்த பயனாளிகளுக்கு 2-வது டோஸ் போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக மாவட்டம் வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்து 2-வது டோஸ் போட வேண்டிய பயனாளிகளை அடையாளம் கண்டறியலாம் என சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்து உள்ளார்.