கதாநாயகி ஆக ஆசைப்பட்ட கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.24 லட்சம் மோசடி; 2 பேர் கைது

நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று மாணவியிடம் கேட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட அவர், தனது சுயவிவரத்தை திரைத்துறையை சார்ந்த நபர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை ஒரு நபர் தொடர்பு கொண்டு தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். அந்த நபர் மேலும் சிலரின் தொடர்பு எண்களை கொடுத்து அவர்களிடம் பேசுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளார். அவர்களிடம் பேசியபோது, நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய அந்த மாணவி, தனது பெற்றோரிடம் ரூ.24 லட்சம் பணத்தை வாங்கி அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த கும்பல், மாணவியின் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத மாணவி, இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






