

புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டித்தழுவிய சம்பவம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தநிலையில் இமாசலபிரதேச மாநிலம் கசாலிநகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சித்து, நான் தமிழ்நாட்டிற்கு சென்றால், அங்குள்ள மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்கு பிடிக்காது. அம்மாநில கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாபி பேசுகிறார்கள். பஞ்சாபில் இருக்கும் கலாசாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது என்று பேசினார்.
சித்துவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி இது. பாகிஸ்தான் நாட்டின் மீது உள்ள தனது பாசத்தை சித்து மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். இம்ரான்கான் (பாகிஸ்தான் பிரதமர்) மந்திரிசபையில் சித்து சேர்ந்து விடலாம். இதுதான் நாங்கள் அவருக்கு அளிக்கும் அறிவுரை என்று கூறினார்.