

புதுடெல்லி,
மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“விண்வெளித் துறையில் இந்தியர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர். ராஜஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளோம். இப்படிப்பட்ட சாதனைகளை சில நாடுகள் மட்டுமே செய்திருக்கின்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இந்த சாதனைகள், இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்வதை காட்டுகின்றன.
உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேற்காசிய போர் இந்திய வளர்ச்சியை தடுக்கவில்லை. மேற்காசிய போரால் ஏற்பட்ட சவால்களை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை கடந்து இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களுக்கு மதிப்பு அளித்து, அனைத்து கருத்துகளையும் மதிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது அனுபவத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். வேகமான வளர்ச்சி மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.