

புதுடெல்லி
டெல்லி சட்டசபைக்கான சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு மிரட்டல் விடப்பட்டு வந்தது. டெல்லி சட்டசபையின் வாசல் வழியே நபர் ஒருவர் சமீபத்தில் அத்துமீறி நுழைந்து, அடையாளம் தெரியாத பொருள் ஒன்றை, சபாநாயகரின் வாகனத்தில் வைத்து விட்டு சென்றார். இந்த தகவல் பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவருக்கு மிரட்டல் விடுத்து, சட்டசபை செயலகம் மற்றும் சபாநாயகர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 6 முதல் 7 அச்சுறுத்தல் இ-மெயில்களும் வந்துள்ளன. இதனை தொடர்ந்தே, உடனடியாக அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அவருக்கு புதிதாக இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு குழு ஒன்று 24 மணிநேரமும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும். சபாநாயகரின் வாகனத்துடன் எல்லா நேரமும் பாதுகாப்பு கார் ஒன்று செல்லும். அவருடைய அனைத்து அலுவல்பூர்வ இயக்கங்களின்போதும் மற்றும் பொதுவெளியில் தோன்றும்போதும் இந்த தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொடரும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.