தொடர் கனமழை: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

கோப்புப்படம்
இந்த ஆண்டு ஜம்முவில் இருந்து யாத்திரை நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
ஜம்மு காஷ்மீர்,
பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. பால்டால் பாதை, பஹல்காம் பாதை வழியாக பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீரின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பால்டால் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார்.
இதனிடையே காஷ்மீரின் சில பகுதிகளில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு ஜம்முவில் இருந்து யாத்திரை நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.






