

புதுடெல்லி
சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி முன்பு 21 நாட்கள் என இருந்தது. இந்நிலையில், இது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என அரசு வட்டாரம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதற்கு முன்பு மக்கள் 55 நாட்கள் இடைவெளியில் முன்பதிவு செய்து வந்த நிலையில், தற்போது 15 நாட்களில் முன்பதிவு செய்யும் சம்பவங்கள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று வர்த்தக பயன்பாட்டுக்கான இணைப்புகளை விட வீடுகளுக்கான இணைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் பார்த்து கொள்ளும்படியும் விற்பனை நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளது.
மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
எனினும், இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வதற்காக அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே நாடுகள் அணுகியுள்ளன என அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.