

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. லட்சத்தீவை தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 7,924 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் 6,993, ஆந்திராவில் 6,051, கர்நாடகாவில் 5,324, உத்தரபிரதேசத்தில் 3,505, தெலுங்கானாவில் 3,083, மேற்குவங்காளத்தில் 2,112, பீகாரில் 2,068, ஒடிசாவில் 1,503, அசாமில் 1,348, குஜராத்தில் 1,052, ராஜஸ்தானில் 969, அரியானாவில் 795, மத்தியபிரதேசத்தில் 789, கேரளாவில் 702, டெல்லியில் 613, பஞ்சாபில் 551, ஜம்மு காஷ்மீரில் 470, ஜார்கண்டில் 408, சத்தீஸ்காரில் 295, கோவாவில் 258, உத்தரகாண்டில் 224, திரிபுராவில் 149, இமாசலபிரதேசத்தில் 94, புதுச்சேரியில் 86, அருணாசலபிரதேசத்தில் 81, மணிப்பூரில் 51, நாகாலாந்தில் 46, மேகாலயாவில் 36, தாதர்நகர் ஹவேலியில் 32, சண்டிகாரில் 23, மிசோரத்தில் 23, லடாக்கில் 21, அந்தமான் நிகோபார் தீவில் 14, சிக்கிமில் 10 என ஒரே நாளில் மொத்தம் 47 ஆயிரத்து 703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64.24 சதவீதம் பேர், அதாவது 9 லட்சத்து 52 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மராட்டியத்தில் 227 பேரும், தமிழகத்தில் 77 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், ஆந்திராவில் 49 பேரும் பேரும், மேற்குவங்காளத்தில் 39 பேரும், உத்தரபிரதேசத்தில் 30 பேரும், டெல்லியில் 26 பேரும், குஜராத்தில் 22 பேரும், தெலுங்கானாவில் 17 பேரும், பஞ்சாபில் 12 பேரும், ராஜஸ்தானில் 10 பேரும், பீகார் மத்தியபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், அசாம் மற்றும் ஒடிசாவில் தலா 7 பேரும், அரியானாவில் 5 பேரும், திரிபுரா மற்றும் ஜார்கண்டில் 4 பேரும், புதுச்சேரி மற்றும் உத்தரகாண்டில் தலா 3 பேரும், இமாசலபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும், அந்தமான் நிகோபார் தீவு, சண்டிகார், சத்தீஸ்கார், கோவா, நாகாலாந்து மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் என ஒரே நாளில் 654 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு கொரோனாவால் 3 லட்சத்து 83 ஆயிரத்து 723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்து 883 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மும்பையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரு நாளில் 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருக்கிறது.
இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு நல்ல செய்தி, மும்பையில் ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை(8,776) மேற்கொண்ட போதிலும், 700 பேருக்கே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது. எனினும், மக்கள் பாதுகாப்பு விதிகளை கைவிட்டு விடக்கூடாது. முககவசம் அணிவதை தொடருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு கொரோனாவால் 3,659 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 31 ஆயிரத்து 219 ஆகவும், பலி எண்ணிக்கை 3,853 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளன. 2 மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,953, ஆந்திராவில் 1,090 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அங்கு 63 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.