

புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பேசுங்கள் என்ற பிரசார நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூ.1.5 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது என டெல்லி அரசின் கண்காணிப்பு துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக முதற்கட்ட விசாரணையை சி.பி.ஐ. அமைப்பு நேற்று மேற்கொண்டது. எனினும் விதிகளின்படி, சிசோடியாவின் இருப்பிடத்தில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இந்நடவடிக்கை மாநில அரசை அடிபணிய வைக்கும் பாரதீய ஜனதாவின் உள்நோக்கம் நிறைந்த முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையை இது மோசமடைய செய்யும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளை நிலைகுலைய செய்யும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி சிறப்புடன் செயல்படுகிறது என குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இதனை செய்து முடிப்பதற்கு சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நடவடிக்கைகளை நிறைவேறாமல் தடுக்கும் வகையில் ஆளுநரின் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது தெரிகிறது.
இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக வலிமையான குரலை எழுப்ப வேண்டுமென டெல்லி மக்களை நாங்கள் கேட்டு கொள்கிறோம். பாரதீய ஜனதா மற்றும் அக்கட்சியின் தலைமையிலான மத்திய அரசின் இதுபோன்ற சுதந்திரமுடன் செயல்படுவதனை கட்டுப்படுத்தும் வகையிலான இழிவான செயலை நிறுத்துவது என்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.