

திருவனந்தபுரம்,
கேரளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோட்டயம் மாவட்டம் பாலா நகராட்சியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தம் உள்ள 26 வார்டுகளில் 10 வார்டுகளில் வெற்றி பெற்றது. 12 இடங்களில் இடது முன்னணி வெற்றி பெற்றிருந்தது.
அதே சமயத்தில் சுயேச்சையாக தியாபானு (வயது 21) மற்றும் அவருடைய தந்தை உள்பட 4 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து அந்த நகராட்சியை கைப்பற்ற சுயேச்சைக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி சுயேச்சை கவுன்சிலர் தியாபானு, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் அவர் இந்தியாவிலேயே வயது குறைந்த நகராட்சி தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தநிலையில் அவருக்கு எதிராக தற்போது இடது முன்னணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 17 பேர் வாக்களித்தனர். இதனால் தியாபானு தனது பதவியை இழந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள் 4 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.