

புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுவது, போதைப்பொருளை எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு கடத்துவது போன்ற செயல்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும், அவர்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் இணையவழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே பயங்கரவாத பிரசாரத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இணையவழியாகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான கண்காணிப்பை இந்திய உளவு அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், உத்தரகாண்ட் - டேராடூனில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு தொடர்புடைய 'தெஹ்ரீக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான்' என்ற பயங்கரவாத குழுவுக்கு உளவு பார்த்த விக்ராந்த் காஷ்யப் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணுவ மற்றும் அரசு கட்டிடங்களின் இருப்பிடத் தகவல்கள், வீடியோக்களை இவர் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள், ஸ்ப்ரே பெயிண்ட், உளவுத் தகவல்கள் அடங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.