டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

முதல்-மந்திரிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர், முதல்-மந்திரியிடம் புகார் மனு அளிப்பது போல் நெருங்கி திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்-மந்திரியை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷ் சக்ரியாவை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில், டெல்லி முதல-மந்திரி வர் ரேகா குப்தா தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு நேற்ற் காலை சென்ற சிஆர்பிஎப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்-மந்திரிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்-மந்திரியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றாக உள்ளது. அருகில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், இடத்துக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், வாகனம் மற்றும் துணை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உட்பட சுமார் 20 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கே இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.

இதனிடையே மக்கள் குறைதீர் கூட்டத்தில் தெருநாய்களை வெளியேற்றுவது குறித்த எனது கருத்தைக் கேட்ட முதல்-மந்திரி கேட்க மறுத்ததால் தாக்கினேன். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்தவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com