டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளர் நியமனம்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் ஜட்ஷியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளர் நியமனம்
Published on

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் கடந்த ஜனவரி 6ந்தேதியில் இருந்து பிப்ரவரி 3ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில், ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தன.

இதற்காக நடைபெற்ற பேரணிகள், பிரசாரங்கள் மற்றும் போஸ்டர்கள் என டெல்லி முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றியுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களை கவரும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளன. தேர்தல் வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் ஜட்ஷியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர் முன்னாள் துணை தேர்தல் ஆணையாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com