விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை: டெல்லி போலீசாரால் 22 முதல் தகவல் அறிக்கை பதிவு

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 22 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீசார் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 22 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 5 முதல்தகவல் அறிக்கை கிழக்கு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கதல்ல என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்தார். மேலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளால் உருவாக்கப்படும் நல்லெண்ணத்தை இது மறுக்கும். அனைத்து உண்மையான விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com