

புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. அரியானா பல்கலைக்கழக டாக்டர் உமர்நபி இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அரியானா அல்பலா பல்கலைக்கழக டாக்டர்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். அவரது பெயர் சோயிப். இவர் பரிதாபாத்தை சேர்ந்தவர். டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய உமர்நபிக்கு, சோயிப் அடைக்கலம் கொடுத்ததை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.