உலக நாடுகளின் தலைநகரங்களுடன் டெல்லி போட்டியிட வேண்டும்: புதிய கவர்னர் பேச்சு
புதுடெல்லி
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை பல்வேறு மாநில கவர்னர்களை இடம் மாற்றினார். இதன்படி, டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக தரண்ஜித் சிங் சந்து நேற்று பதவியேற்று கொண்டார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லி நம்முடைய தலைநகரம். நாம் உலக நாடுகளின் தலைநகரங்களுடன் போட்டியிடவும், ஒப்பீடு செய்யவும் வேண்டும். ஒவ்வொருவருடனும் இணைந்து நாம் செல்ல வேண்டும். வளர்ச்சியிலேயே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு முன் அவர் இன்று தெற்கு மோதி பாக்கில் உள்ள மோதி பாக் சாஹிப் குருத்வாராவிலும் பின்னர் ஆர்.கே. புரத்தில் உள்ள உத்தர சுவாமி மலாய் கோவிலிலும் சாமி தரிசனம் மேற்கொண்டார். 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டவரான சந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதராகவும் பதவி வகித்திருக்கிறார்.
டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.

