ரூ.500 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
ரூ.500 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
Published on

அமராவதி,

ஆந்திராவின் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மகாநாடு தொடங்கியது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதவது:

டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை பிரதமரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தேன். அதில் ரூ.500, ரூ.1000, ரூ.2000 ஆகிய நோட்டுகளை ஒழிக்குமாறு கேட்டுக் கொண்டேன். புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை நீக்குவது பல நன்மைகளை தரும். ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும். இந்த மாநாட்டில் இதை வலியுறுத்துகிறேன்.

தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ அதையே தான் நாளை இந்தியா நினைக்கிறது. தேர்தலில் ஓட்டுகளுக்காக மக்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை. மக்களுக்கு நல்லது செய்தால் ஓட்டுகள் தானாகவே கிடைக்கும்" என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய ரூ. 2,000, ரூ. 500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதன்பின்னர் கடந்த 2023 மே மாதம் ரூ. 2,000 நோட்டுகளின் புழக்கத்தையும் ஆர்பிஐ நிறுத்தியது, தற்போது ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com