

புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்' என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிலும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் சற்று தாமதமானது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 202 தேர்வு மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பேனா, காகித முறையில் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்கள், தங்களின் தேர்வு மையம் குறித்த விவரங்களைக் என்.டி.ஏ.வின் இணையதளத்தில் காணலாம் அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். அதேபோல விண்ணப்பதாரர்கள், தேர்வில் ஓ.எம்.ஆர். தாளை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தைக் காண்பதில் சிக்கல் உள்ள விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யலாம் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.