'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர். தற்போது மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த தாக்குதல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றாலும், "மும்பையை பாதுகாப்பற்றது என்று முத்திரை குத்துவது" சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என்று முத்திரை குத்துவது தவறு. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) வழங்கி உள்ளனர். இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்ட பிறகு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கூறினார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி பல்வேறு கட்சித் தலைவர்கள் மாநில அரசை கடுமையாக சாடியதை தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com