

திருமலை,
திருமலையில் சாமி தரிசனம், தங்குமிடம் சம்பந்தமாக பக்தர்கள் போலி இணையதளங்களை நம்ப வேண்டாம், என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் பரவி வரும் ttddevasthanam.online-என்ற போலி இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளம் பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்தில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தேவஸ்தான இணையதள முகவரியுடன் மிக சிறிய வேறுபாடு மட்டுமே கொண்ட இந்த போலி இணையதளம், ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்க ளுக்கான ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் எனப் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த போலி இணையதளத்தின் முக்கிய நோக்கம், ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் என்ற பெயரில் பக்தர்களிடம் இருந்து பணம் பறிப்பதுடன், தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகும். இந்த மோசடி இணையதளத்தை உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட டொமைன் தள நிர்வாகத்திடம் தேவஸ்தானம் புகார் அளித்தது. அத்துடன் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்யுமாறு திருமலை-2 டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களை ஏமாற்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீவாரி தரிசனம், தங்குமிடம். சேவை டிக்கெட்டுகள் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை முன்பதிவு செய்யும்போது தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் அங்கீகாரமற்ற இணையதளங்கள் அல்லது இணைப்புகளை நம்பவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், அவை மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.