

புதுடெல்லி
நாடு முழுவதும், சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்தது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலால் 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தள்ளிப்போடப்பட்டன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் சென்சஸ் கணக்கெடுப்புக்கான பணிகள் நடைபெறும் என தகவல் வெளியானது.
இதுதொடர்பாக டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் ஆணையாளரான மிருதுஞ்சய் குமார் நாராயண் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர் கூறும்போது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முழு அளவில் நடந்து வருகின்றன. அதன் பணிகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளன. சென்சஸ் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில், முதல் கட்ட பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும். பல்வேறு மாநிலங்களில் வீடு, வீடாக சென்று சென்சஸ் எடுக்கப்படும்.
இந்த முறை சென்சஸ் கணக்கெடுப்புக்கான தரவுகள் டிஜிட்டல் ஊடகம் மூலம் சேகரிக்கப்படும் என்று கூறினார். இதில், சென்சஸ் சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ், தனி நபர் தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூட இதனை வெளிப்படுத்த முடியாது என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும். இந்த நடைமுறையை செயல்படுத்துவதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அடிமட்டம் வரையிலான களப்பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்காக முழு அரசு நிர்வாகமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.