

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு பயோமெட்ரிக் தகவல்கள் (கைரேகை, கருவிழி) உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படுகின்றன. அரசின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் ஆதார் அட்டை அவசியமாக கேட்கப்படுகிறது.
ஆதார் அட்டைகளைப் பொறுத்தவரை பெயர், முகவரியில் தவறு இருந்தால் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் எழலாம். எனவே இவற்றை சரியாக வைத்திருப்பது கட்டாயம். ஒருவேளை முக்கிய விவரங்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை ஆதார் மையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் இதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன.
அதாவது ஆதாரில் பெயரை இருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தலாம். பிறந்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்த முடியும்.
அதே நேரத்தில் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும், போதிய ஆவணங்களை சமர்ப்பித்து திருத்த முடியும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளம் அல்லது ஆதார் மையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி இந்த திருத்தங்களை செய்து கொள்ளலாம்.