

மும்பை,
சாதாரண மக்களை அங்குமிங்கும் அலைய விடாமல், அவர்கள் நலனுக்காக பணியாற்றுங்கள் என்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.
மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் வருமானவரித்துறையின் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அக்கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வருமானவரித்துறையின் இந்த 13 மாடி கட்டிடத்தை கட்டுவதற்கு உரிய அனுமதி பெறுவதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு துறைக்கும் அலைந்துள்ளனர். மக்களை அச்சுறுத்தக்கூடிய வலிமையான படை அவர்களுக்கு பின்னால் இருந்தும், அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியானால், உங்களை அணுகும் சாதாரண மக்களின் நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்கள் அதிகாரத்தை காண்பித்து, அவர்களை அங்குமிங்கும் அலைய விடாதீர்கள். அவர்களின் நலனுக்காக பணியாற்றுங்கள். அதற்காக விதிமுறைகளை மீறுமாறு நான் சொல்லவில்லை. சாதாரண மக்களுக்காக ஏதேனும் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். இந்த நாட்டில் மக்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளை பெறக்கூட ஏராளமாக முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம் 1973-ம் ஆண்டில் இருந்து வருமானவரித்துறையிடம் இருக்கிறது. இருப்பினும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் கூடாது. பெரும்பாலான வருமானவரித்துறை அதிகாரிகள் மும்பையில் வாடகை வீடுகளிலோ, அரசு குடியிருப்புகளிலோ தங்கி இருக்கிறீர்கள். அவர்களுக்கு வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.