

அனந்தப்பூர்
ஆந்திர பிரதேசத்தில் வறட்சியால், விநாயகர் சிலைகளை மக்கள் நீரில் கரைக்காமல் ஆங்காங்கே விட்டுச்சென்றுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் போதிய மழையின்றி வறட்சி நிலை காணப்படுகிறது. அனந்தப்பூர், சித்தூர், ராயலசீமா மற்றும் கடப்பா போன்ற மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகுவிமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதன்பின்னர் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், கடும் வறட்சியால், ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா மாவட்டத்தில் பாயக்கூடிய சித்ராவதி ஆறு வறண்டு காணப்படுகிறது.
புத்துலூரு மற்றும் எல்லனூரில் வற்றிப்போன ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க முடியாத சூழலில், மக்கள் அவற்றை அப்படியே தரையில் வைத்து விட்டு செல்கின்றனர். வறட்சியை முன்பே கணித்து, திருவிழாவின்போது தேவையான போதிய நீரை திறந்து விட அரசு தவறி விட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால், விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நீரில் கரைக்கப்படாமல் வெயிலில் காய்ந்தபடி உள்ளன.