தயாநிதி அழகிரியின் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

தயாநிதி அழகிரியின் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. #Enforcementdirectorate
தயாநிதி அழகிரியின் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
Published on

புதுடெல்லி,

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவருக்கு சொந்தமான ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுபற்றி அமலாக்க துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமோசடி தடுப்பு சட்டம், 2002ன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டு உள்ளன.

இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் லாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com