

புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவரது சொந்தக் கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் நம்பிக்கை இல்லை என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் சிங் ராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் ஆதரவாளர்கள் மற்றும் பல எம்.எல்.ஏ.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாநில காங்கிரஸில் உள்கட்சி மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஷெஸாத் பூனாவாலா கூறியதாவது:
"காங்கிரஸ் கட்சியின் இயல்பே பிளவுபட்டு செயல்படுவதுதான். அந்தக் கட்சியிடம் வலுவான தலைமை, தெளிவான கொள்கை, உறுதியான இலக்கு, நீண்டகால தொலைநோக்குப் பார்வை ஆகியவை இல்லை. பதவியை அடைவதற்கான போட்டி மட்டுமே அங்கு மேலோங்கி உள்ளது.அதனால்தான் பஞ்சாப் காங்கிரஸில் புதிய உள்கட்சி மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன.
கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ராகுல் காந்தி மீது காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே நம்பிக்கை இல்லாததுதான். அதேபோல், அவர்களது கூட்டணிக் கட்சிகளும் ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைக்கவில்லை" என்று ஷெஸாத் பூனாவாலா தெரிவித்தார்.