கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் தள்ளி கொலை: பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் வெறிச்செயல்

கள்ளக்காதலன் அந்தப்பெண்ணை அவரது வீடு தேடிச்சென்று சந்தித்து வந்துள்ளார்.
கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் தள்ளி கொலை: பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் வெறிச்செயல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் உம்ரி அருகே உள்ள போர்ஜூனி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அவர் கணவருடன் அருகே உள்ள கோலேகாவ் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அவருக்கு லகான் பண்டாரே என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலன் அந்தப்பெண்ணை அவரது வீடு தேடிச்சென்று சந்தித்து வந்துள்ளார். இது பெண்ணின் மாமியாருக்கு தெரியவரவே அவர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க தொடங்கினார்.

சம்பவத்தன்று தனது மருமகளையும், அவரது கள்ளக்காதலனையும் கையும், களவுமாக பிடித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, தாத்தா மற்றும் உறவினர் ஒருவர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது குடும்ப பெண் கள்ளக்காதலனுடன் சிக்கியதை கண்டு கொதித்தெழுந்தனர்.

கள்ளக்காதல் ஜோடியான சஞ்சீவானி, லகான் பண்டாரேயை அங்கிருந்து அழைத்து சென்றனர். போகும் வழியில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், கக்ராலா பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கள்ளக்காதல் ஜோடியின் கை, கால்களை கட்டி அவர்களை ஈவு, இரக்கமின்றி கிணற்றில் வீசி கொன்றனர். இதற்கிடையே அந்த கிணற்றில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர், கிணற்றில் இருந்து சஞ்சீவானி, லகான் பண்டாரேயின் உடல்களை மீட்டனர். இதற்கு மத்தியில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உள்பட குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com