

புதுடெல்லி,
இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
எனவே, மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் பதவி விலக வலியுறுத்தி உள்ள வேளாண் அமைப்புகள், இந்த ஒப்பந்தத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து உள்ளன.
இது குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,‘இந்தியா–அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக சரணடைய வைத்துள்ளது’ என குற்றம்சாட்டி உள்ளது.எனவே, இதை கண்டித்து நாடு முழுவதும் கிராமங்கள் தோறும் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ள அந்த அமைப்பினர், 12-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். இதேபோல், இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்து உள்ளன.