விரலில் காயம்.. தடைகளை தாண்டி வாக்கு செலுத்திய இளம்பெண்

இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்க வேண்டும் என்பதால், அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை.
விரலில் காயம்.. தடைகளை தாண்டி வாக்கு செலுத்திய இளம்பெண்
Published on

திருச்சூர்,

கேரள சட்டசபைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், திருச்சூரில் இளம்பெண் ஒருவரை வாக்களிக்க வாக்குச்சாவடி அதிகாரி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அக்சயா (வயது 26). இவர் திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்தார்.

அவரது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு, கையில் தையல் போடப்பட்டு பேண்டேஜ் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் அந்த விரலில் மை வைக்க முடியவில்லை. ஆனால், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்க வேண்டும் என்பதால், அவரை ஓட்டு போட வாக்குச்சாவடி அதிகாரி அனுமதிக்கவில்லை. அவரிடம், அக்சயா தான் சமையல் செய்யும் போது காயம் ஏற்பட்டதாக கூறி ஓட்டு போட அனுமதி கேட்டார்.

ஆனால், கையில் உள்ள கட்டை அவிழ்த்து காயத்தை பார்க்க வேண்டும் என்று அதிகாரி கட்டாயப்படுத்தினார். பின்னர் அந்த இளம்பெண் மருத்துவ சான்றிதழை காண்பித்தார். அதை ஏற்க வாக்குச்சாவடி அதிகாரி மறுத்தார். இதுதொடர்பாக அவருடன் இடது முன்னணி வேட்பாளர் சுனில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர், இளம்பெண் வாக்களிக்க அனுமதித்தார். அதன் பேரில் இளம்பெண்ணுக்கு நடுவிரலில் மை அடையாளம் வைக்கப்பட்டு, ஒட்டு போட அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com