

புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் மவுஜ்பூர் பகுதியில் நேற்று 2-வது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் சிலர் அங்கு கூடினார்கள். அவர், போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.
அந்த சமயத்தில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர். இருதரப்பினரையும் போலீசார் அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் இருந்த பல வாகனங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கு சிலர் தீவைத்தனர்.
இறுதியாக கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதில் கூட்டத்தினர் நாலாபுறமும் கலைந்து ஓடினர். இந்த மோதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன.
வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பல போலீசாரும் காயம் அடைந்தனர். காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே டெல்லி கவர்னர் அனில் பைஜால், வடகிழக்கு டெல்லியில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கவர்னர் டுவிட்டர் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்முறையை தொடர்ந்து டெல்லியில் சில பகுதிகளில் நேற்று தடை உத்தரவு போடப்பட்டது.