

லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் பருக்காபாத் மாவட்டம் காயம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி சவுமியா, பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது தெருவில் இருந்த நாய் ஒன்று திடீரென சிறுமியை நோக்கி குரைத்துக்கொண்டே ஓடி வந்தது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, நாயிடமிருந்து தப்பிக்க பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடினாள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு திறந்த நிலையில் இருந்த பழைய பாழடைந்த கிணற்றின் சேதமடைந்த மூடி மீது சிறுமி கால் வைத்ததும், அது உடைந்து சுமார் 40 முதல் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சவுமியா விழுந்தாள்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிணற்றுக்குள் நச்சு வாயு அபாயம் இருந்ததால் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் முகக்கவசம் அணிந்து கயிறு மூலம் உள்ளே இறங்கினர்.
சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுமி சவுமியாவை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பத்திரமாக உயிரோடு மீட்டனர். உடனடியாக சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். தற்போது அவளது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாய்க்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்ததும், அவளை சாதுரியமாக மீட்ட மீட்புக்குழுவினரின் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.