நேபாளத்தில் வெள்ள பாதிப்பு: 288 இந்தியர்கள் மாயம் என தகவல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வெள்ள பாதிப்பு: 288 இந்தியர்கள் மாயம் என தகவல்
Published on

புதுடெல்லி,

நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய அரசு சார்பில் நேபாளத்திற்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 288 இந்தியர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனவர்களில் 'திரிசூலி ஒன்' (Trishuli One) மின் திட்டத்தில் பணிபுரியும் 73 இந்தியர்களும், சுற்றுலா குழுக்களும் அடங்குவர்.

இவர்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் நேபாள அரசுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தக் கடினமான சூழலில் இந்தியா நேபாளத்துடன் உறுதுணையாக நிற்கிறது. அந்நாட்டின் தேவைக்கேற்ப அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com