

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென வெள்ள நீர் புகுந்தது. மண் மற்றும் கற்களும் நீருடன் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 3 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமோலி மாவட்டத்தின் பிபல்கோட்டி பகுதியில் நீர்மின் திட்டத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் சுரங்கத்துக்குள் திடீரென அதிக அளவில் தண்ணீர் புகுந்தது., மண் மற்றும் குப்பைகளும் நீருடன் அடித்து செல்லப்பட்டடுது. சுரங்கத்துக்குள் மொத்தம் 28 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. தண்ணீரின் வேகத்தில் பல தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின.18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுரங்கத்துக்குள் புகுந்த மண், கற்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர் மழையால் அங்கு பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.