கேதார்நாத் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் மோடி வழிபட்டார்

கேதார்நாத் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். கடவுளிடம் எதுவும் கேட்கவில்லை என்று அவர் கூறினார்.
கேதார்நாத் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் மோடி வழிபட்டார்
Published on

பத்ரிநாத்,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் முடிவடைந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். கோவிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலை வலம் வந்தார். கோவில் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். கோவில் அருகே உள்ள ஒரு புனித குகையில், காவி சால்வையை போர்த்திக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டார். மொத்தம் 17 மணி நேரம் குகையிலேயே இருந்தார்.

பின்னர், நேற்று குகையில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கோவிலுக்கு பலதடவை வரும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், இங்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்கிய தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பணிகள் இருக்கும்போது, பத்திரிகையாளர்கள் இங்கு வந்திருப்பது இந்த கோவில் நகரம் வளர்ச்சி அடைந்திருப்பதை காட்டுகிறது.

சாமி கும்பிட்டபோது, கடவுளிடம் எதுவும் நான் கேட்கவில்லை. அது என் பழக்கம் இல்லை. கடவுள், எங்களுக்கு கொடுக்கும் திறனையே கொடுத்திருக்கிறார், கேட்கும் திறனை அல்ல. இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மகிழ்ச்சி, வளமை, நல்வாழ்வு ஆகியவற்றை வழங்க கடவுள் அருள் புரியட்டும். இவ்வாறு மோடி கூறினார்.

பின்னர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற ஆன்மிக தலமான பத்ரிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பூஜை செய்து வழிபட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com