எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

2016-ல் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் போல எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

2016-ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் போல எல்லை தாண்டிய பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தலைநகர் பாரீசில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அண்டை நாட்டு (பாகிஸ்தான்) பயங்கரவாத கட்டமைப்புகளும், அரசு ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வருகின்றனர். ஒரு பொறுப்புள்ள அரசாக, இந்த அச்சுறுத்தல்களை கையாளுவதில் நாங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டை பேணி வருகிறோம்.

எனினும் கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து எங்கள் ராணுவம் மேற்கொண்ட துல்லிய (சர்ஜிக்கல்) தாக்குதல் மூலம், இத்தகைய எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் புரவலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தை நாங்களும் வெளிப்படுத்தி இருக்கிறோம். இது மேலும் தொடரும்.

தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் பயங்கரவாத தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மிக துல்லியமாக கூறமுடியும். நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே முதன்மையான அச்சுறுத்தல் ஆகும். அரசு மற்றும் அரசு சாதார நிறுவனங்கள், பினாமிகள் மூலம் அடிக்கடி நிகழ்த்தும் வன்முறைகள் அச்சுறுத்தலை அதிகரிக்கின்றன.

தொடர் வன்முறை மற்றும் நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி, அதைப்போல மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக இருக்கின்றன. இத்துடன் வெளிநாட்டு பயங்கரவாதிகள் பிரச்சினை மற்றும் கட்டுப்பாடற்ற இடப்பெயர்வு போன்றவைதான் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலைத்தன்மைக்கு தெளிவான அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com