இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19 சதவீதம் குறைந்தது

மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19 சதவீதம் குறைந்தது
Published on

புதுடெல்லி,

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மூன்றாவது முழு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் (எல்.பி.ஜி.) பயன்பாடு கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங் கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், பெட்ரோல் நுகர்வு 2.8 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், டீசல் பயன்பாடு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி, விமான எரிபொருள் பயன்பாடும் இதே காலகட்டத்தில் சுமார் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பயன்படுத்தப்பட்ட 26.2 லட்சம் மெட் ரிக் டன்னுடன் ஒப்பிடுகையில் 19.2 சதவீதம் குறைவாகும். இந்த சரிவுக்கான காரணம் குறித்து ஐ.சி.ஆர்.ஏ. நிறுவனத் தின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் கூறுகையில், நகர்ப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் மறுபதிவு இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டதுமே முக்கிய காரணம் என்றார்.

மேலும் அவர், நெருக்கடிக்கு முந்தைய அளவின் 70 சதவீத வணிக சிலிண்டர் வினியோகத்தை பராமரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும் பயன்பாட்டை பாதித்ததாக அவர் குறிப்பிட்டார். டெல்லியைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் எரிசக்தி மற்றும் மின்சாரத் துறைத் தலைவர் அபிஷேக் நாத் கூறுகையில், "இந்தியாவில் மே மாதத்தில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு குறைந்ததற்கு முக்கிய காரணம் வினியோகத் தடைகளே. கியாஸ் பயன்பாட்டில் பெரிய அளவிலான கட்டமைப்பு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், சிலர் மின்சார அடுப்பு சமையல் முறைகளையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்" என்றார்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் இந்தி யாவின் பெட்ரோல் பயன்பாடு 38.9 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அது 37.8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. அதேபோல், டீசல் பயன்பாடு இந்த ஆண்டு மே மாதத்தில் 86.7 லட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 85.9 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. டீசல் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு. ஏற்கனவே அதிக நுகர்வு இருந்த அடிப்படையில் இருந்து மேலும் சிறிதளவு உயர்ந்த நிலைக்கு சென்றிருப்பதையே பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com