நாளை மறுநாள் சிறைக்கு செல்வேன்; என்னை மேலும் துன்புறுத்த முயற்சிப்பார்கள்: கெஜ்ரிவால்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது.
நாளை மறுநாள் சிறைக்கு செல்வேன்; என்னை மேலும் துன்புறுத்த முயற்சிப்பார்கள்: கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந்தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் நாளை மறுநாளுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், கெஜ்ரிவால் வரும் 2 -ம் தேதி திகார் சிறையில் சரண்டர் ஆக உள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-

இந்த முறை என்னை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் உற்சாகம் அதிகமாக உள்ளது. நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் (பாஜக) என்னை பல வழிகளில் நிலைகுலைய வைக்க முயன்றனர். என் குரலை நசுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை. நான் சிறையில் இருந்த போது, அவர்கள் என்னை பல வழிகளில் சித்திரவதை செய்தனர். நான் பயன்படுத்தும் மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? என்னை மேலும் துன்புறுத்த முயற்சிப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com