

புதுடெல்லி,
தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல் அமைச்சருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, தமிழக ஆளுநர், சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. 20-ந் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இத்தகைய பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் ஆலோசனை நடத்திய கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.