

புதுடெல்லி,
2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மத்திய நேரடி வரி வாரியம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின்னர் அது மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 5வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு, கடந்தாண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. அதற்கான காலக்கெடு தற்போது செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு 6வது முறையாக காலக்கெடுவை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் ஆதார் எண்ணுடன் இதன் இணைப்பு கட்டாயமாகிறது.