

அமராவதி,
ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று சட்டசபையில் உரையாற்றியபோது கூறியதாவது:-
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் சுமையை ஆந்திரா சுமந்து வருகிறது. அனைத்து சிசேரியன் (சி -பிரிவு) அறுவை சிகிச்சைகளில் 90 சதவீதம் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கின்றன. 56.62 சதவீத சிசேரியன்கள் டாக்டர்களின் பேராசையால் ஊக்குவிக்கப்பட்டு நடப்பதாக தெரியவருகிறது. அரசாங்கம் இந்த போக்கை அங்கீகரிக்கவில்லை. சிசேரியன் அறுவை சிகிச்சைகளில் மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இனிமேல் பாதுகாப்பான பிரசவங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை சபாநாயர் ரகுராமகிருஷ்ணா ராஜூ பேசும்போது, கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே பிரசவ தேதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது சில குடும்பங்கள் கர்ப்பம் தனது சொந்த இயற்கையான போக்கை எடுப்பதற்கு பதிலாக மங்களகரமான பிரசவ நேரத்தை நோக்கி செல்வதை காட்டுகிறது. என்றார்.
அப்போது பதிலளித்த சந்திரபாபுநாயுடு, அவர்கள் முகூர்த்தங்களை குறிப்பிட்ட நல்லநேரம் அமைத்து பின்னர் பிரசவங்களை செய்கிறார்கள். அது தவறு. கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கையான உடலுக்கு அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றார்.