இறைவணக்கத்தில் பங்கேற்றுவிட்டு வகுப்பறைக்கு சென்ற பள்ளிச்சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு

காலை இறைவணக்கத்தில் பங்கேற்றுவிட்டு வகுப்பறைக்குள் நுழைந்த பள்ளிச்சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Image Courtesy: PTI (File Photo)
Image Courtesy: PTI (File Photo)
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் நகரின் செக்டார் 64 பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த தனியார் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு காலை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இறைவணக்கத்தில் பங்கேற்றுவிட்டு அந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, வகுப்பறைக்கு செல்லும் வழியில் அந்த சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட சம மாணவ-மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். உடற்கூராய்வில் சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      

X

Daily Thanthi
www.dailythanthi.com