மராட்டியத்தில் கனமழை: மும்பையில் 2 பேர் பலி; விமான சேவை பாதிப்பு

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 90 சதவீத விமானங்கள் சராசரியாக 65 நிமிடங்கள் காலதாமதத்துடன் புறப்பட்டு சென்றன.

மராட்டியத்தில் கனமழை:  மும்பையில் 2 பேர் பலி; விமான சேவை பாதிப்பு
Published on

மும்பை

மராட்டியத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் மும்பையில் 2 பேர் பலியாகி உள்ளனர். விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

ரெட் அலர்ட்

இதனால், 24 மணிநேரத்தில் 204.4 மி.மீட்டருக்கும் கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தது. இந்த அளவுக்கு மழை பெய்யும் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.

இந்நிலையில், மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், மும்பையில் மரம் முறிந்து விழுந்ததில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் குர்லா பகுதியில் 63 வயது முதியவரும், கோரேகாவன் கிழக்கு பகுதியில் ஆரே காலனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயது சிறுவனும் பலியாகி உள்ளனர்.

விமான சேவை பாதிப்பு

இதேபோன்று, விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. 4 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 13 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மும்பை விமான நிலையத்தில் மழை தொடர்ச்சியாக, ஒரு மணிநேரம் ஓடுபாதையில் நீர் சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 90 சதவீத விமானங்கள் சராசரியாக 65 நிமிடங்கள் காலதாமதத்துடன் புறப்பட்டு சென்றன. 45 சதவீத விமானங்கள் காலதாமதத்துடன் வந்து சேர்ந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com