இமாசல பிரதேசம்: 800 ஆண்டுகள் பழமையான அரண்மனை தீ விபத்தில் சேதம்

அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிம்லா அருகே ஜுங்கா பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கியோந்தல் என்ற அரண்மனை உள்ளது. இது 800 ஆண்டுகள் பழமையானது. ராஜா குஷ்வக்ரம் சென் என்பவர் ஆட்சி செய்தபோது, கட்டப்பட்ட இந்த அரண்மனையில் பழைய மரங்களே அதிகளவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தன.
இது இடிந்து விழும் நிலையில் இருந்த சூழலில், பல ஆண்டுகளாக யாரும் அதில் வசிக்கவில்லை. இந்நிலையில் இந்த அரண்மனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மதியம் 1 மணியளவில் புகையாக பரவ தொடங்கி தீ மளமளவென பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த அரண்மனையில் மக்கள் யாரும் வசிக்காதபோதும், தங்கம், வெள்ளி நகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அரச குடும்பத்தின் உறுப்பினரான விஜய் ஜோதி சென் கூறும்போது, கோடிக்கணக்கான மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. பழைய அரண்மனை கட்டிடம் முழுவதும் எரிந்து போய் விட்டது என வேதனையுடன் கூறினார்.
இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று சரியாக தெரிய வரவில்லை. பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






