மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஓம்.பிர்லாவுடன் சந்திப்பு

முன்னதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஓம்.பிர்லாவை சந்தித்து பேசினார்.
அமித்ஷா
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகளில் முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரியும். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி அவை ஒத்திவைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக 3-வது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது. இந்தநிலையில், நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்தநிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தார்.

விவாதத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஒரு முன்நிபந்தனையாக எதிர்க்கட்சிகள் முன்வைப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடர் அமளிக்கு மத்தியில் அமித்ஷா ஓம்.பிர்லாவை சந்தித்து பேசி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தி சந்திப்பு

முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பிர்லாவை சந்தித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சௌகதா ராய் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது, ​​நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்த விவாதத்தின் கால அளவு மற்றும் தேதியை முடிவு செய்ய தன்னை சந்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை பிர்லா கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com