

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பெனச்சனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி காவ்யா (27 வயது). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காவ்யா கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாம்பார் தயார் செய்துள்ளார். அதையே 3 நாட்களாக காவ்யா, தனது கணவர் மற்றும் குழந்தைக்கு பரிமாறி வந்துள்ளார்.
அதாவது 3 நாட்களுக்கு முன்பு தயார் செய்த சாம்பாரை, பிரிட்ஜில் வைத்து தொடர்ச்சியாக உணவுக்கு பரிமாறியதாக கூறப்படுகிறது. 3-வது நாளில் உணவுக்கு சாம்பார் பரிமாறிய மனைவி காவ்யா மீது ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். 3 நாட்களாக ஏன் ஒரே சாம்பாரை பரிமாறுகிறாய்? என கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ரங்கசாமி, மனைவி காவ்யாவை திட்டியுள்ளார். அத்துடன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த காவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.