

மும்பை,
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஹீத்ரோ இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை இந்தியாவின் ஐதராபாத்திற்கு வந்துகொண்டிருந்தது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் மராட்டிய மாநில வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது, ஐதராபாத் விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவியது.
இதனால், விமானத்தை மராட்டிய மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தை விமானி நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.
வானிலை சீரடைந்தபோதும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் இன்னும் நாக்பூர் விமான நிலையத்திலேயே உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் ஐதராபாத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.